அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்

1

கேதர்நாத்: உத்தரகண்டில் பயணிகளுடன் கேதர்நாத் சென்று கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் திடீரென சாலையில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மே 2ம் தேதி முதல் கேதர்நாத் புனித யாத்திரை பயணம் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் புனித பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், சிர்ஸி பகுதியில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் 6 பக்தர்கள் கேதர்நாத் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள குப்த்காசி பகுதியில் சாலையிலேயே ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. பைலட்டின் சாமர்த்தியத்தால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisement