10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!

23

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே சீனிவாசபுரத்தில் நீண்ட நாட்களாக ரூ.10 மட்டுமே கட்டணமாக பெற்றுக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் டி.கே.ரத்தினம் பிள்ளை, 96, காலமானார்.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்,96. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவர் 1959ம் ஆண்டு டாக்டர் பணியை துவங்கினார். அவர் 2 ரூபாய்க்கு தனது பணியை ஆரம்பத்தில் தொடங்கினார். இறுதி வரை 10 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வாங்கினார்.


இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எனவே மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறிக் கேட்டுள்ளனர்.

அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மத்திய அரசிடம் கொடுத்தார். மீண்டும் மத்திய அரசு நகையை திரும்பி வழங்கியது. கொரோனா நேரத்தில் தனது கட்டடத்தில் இருந்த கடைகளுக்கு 3 மாத வாடகையை வியாபாரிகளிடம் வாங்கிக்கொள்ளவில்லை.


கடந்த 1929ம் ஆண்டு பிறந்த இவர் இன்று (ஜூன் 07) வயது மூப்பு காரணமாக இறந்தார். இவரது உடல் நாளை அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர்.

வேதனை அளிக்கிறது!

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.10 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ரத்தினம்பிள்ளை வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.


ரத்தினம்பிள்ளையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக பா.ஜ., சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement