சுற்றுச்சூழல் சிறக்க தொழில்துறை முனைப்பு

திருப்பூர்,; இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டு, உலக சுற்றுச்சூழல் தினத்துக்கு, தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில்,நடந்த உலக சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சியில், பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

''சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை, அரசு செயல்படுத்தும் திட்டங்களால் மட்டும் தீர்த்துவிட முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு, தொழில் துறை வளர்ச்சியின் மையமாக இருக்க வேண்டும்'' என சுட்டிக்காட்டியுள்ள அவர், 'இது குப்பை மேட்டர் இல்லை' என்ற பிரசார இயக்கத்தை அரசு முன்னெடுத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு, தொழில் நகரமான திருப்பூருக்கு சாலப் பொருந்துகிறது. 16 லட்சம் மக்கள் வசிக்கும் மாநகர மக்களின், ஒட்டுமொத்த சுகாதாரமும், பாறைக்குழியை நம்பியே இருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு அடிப்படையே குப்பை கொட்டுவதற்கும், அதை கையாள்வதற்கும் ஒரு இடம் தேவை என்பது தான். ஆனால் திருப்பூரில் குப்பை கொட்டவே இடமில்லை என்பது தான் வேதனை.

 ஒரு காலத்தில், சாயக்கழிவுநீரால், ஆயத்த ஆடை தொழிலே அஸ்தமனமாகும் என்றொரு காலகட்டம் உருவானது. அரசின் கொள்கைகள், கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆடை தொழில் ஆட்டம் காணும் நிலை அவ்வப்போது உருவானாலும்கூட,சாதுர்யத்துடனும், சாமர்த்தியத்துடனும், இப்பிரச்னைக்கு திருப்பூர் தொழில் துறையினர் தீர்வு கண்டனர்.

 மழை மறைவு மாவட்டமான திருப்பூரில், வறட்சிக்கு பஞ்சமில்லை. இருப்பினும், தொழில் துறையினர் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினர், விவசாய அமைப்பினரின் விடா முயற்சியால், பல புதிய குடிநீர் திட்டங்கள் பல உருவாகி, பஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

 வனம் மற்றும் அது சார்ந்த சூழல் எதுவும் இல்லாத திருப்பூரில், தரிசு நிலங்களில் கூட மரக்கன்று நடும் திட்டத்தை ஒரு பெரும் இயக்கமாகவே நடத்தி வரும் அமைப்பும் உண்டு. இதுதவிர, பொது இடங்கள், நெடுஞ்சாலையோரம் என, எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மரக்கன்று நட்டு, பசுமைக்கு, சிவப்புக்கம்பளம் விரித்துக் கொண்டிருக்கும், அமைப்பினரும் உண்டு

 புற்றுநோய் பரவி வரும் நிலையில், உயிர் காக்கும் உலகத்தரமான சிகிச்சை வழங்கும் நோக்கில், மாநகராட்சியுடன் இணைந்து, 'நமக்கு நாமே', திட்டத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முதுகெலும்பாக இருந்து செயல்படும் ரோட்டரி அமைப்புகள். மக்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டிய, 30 கோடி ரூபாய் திரட்டுவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

இவ்வாறு, சுற்றுச்சூழல் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்து எழும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், எத்தனை பெரிய சவால், இடையூறுகள் வந்தாலும் திருப்பூரில் செயல்படும் பல்வேறு அமைப்பினர் கை கோர்த்து, அதில் வெற்றி கண்டுள்ளனர்.

அதே நேரம், சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் தோல்வியால், எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட போகும் ஆபத்தை உணர்ந்து, அரசு மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து, குப்பை மேலாண்மை திட்டத்துக்கு கை கொடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் என நம்புவோம்!

Advertisement