பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்

புதுடில்லி: ''பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்'' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு நிதியுதவி அளிக்காமல் தனிமைப்படுத்த வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். பயங்கரவாத உள்கட்டமைப்பின் அடித்தளத்தை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதால், இந்தியா பாகிஸ்தானுக்கு ராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயங்கரமான பதிலடி கொடுத்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்பதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நாங்கள் நிறுத்தி வைத்திருக்கிறோம்.
இந்த முடிவு பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
பாகிஸ்தானில் உள்ள 80 சதவீத விவசாய நிலங்கள் சிந்து நதி நீர் ஒப்பந்தகளை நம்பியுள்ளது. பயங்கரவாதம் என்பது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல; இது ஒரு உலகளாவிய பிரச்னை. பயங்கரவாதத்தை அகற்ற, நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.