சேதமான ரோடு, புதர்மண்டிய தெருக்கள் 'கொடை' 5 வது வார்டில் தொடரும் அவலம்

கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சி 5வது வார்டில் உயரப் பகுதியில் உள்ளது பாக்கியபுரம், ரைபிள் ரேஞ்ச். இங்கு துார்வாரப்படாத சாக்கடை, புதர் மண்டிய தெருக்கள், சேதமடைந்த ரோடு, காட்டுமாடு, தெரு நாய் தொந்தரவு, ரோட்டில் நிறுத்தும் வாகனங்களால் இடையூறு, பட்டா இல்லாத அவலம் என ஏராளமான பிரச்னைகள் உள்ளன.

குடியிருப்புவாசிகள் அச்சம்



பேரின்பம், வியாபாரி : சாக்கடைகள் துார்வாரப்படாமல் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. ரோடு பணி முழுமை பெறாமல் பாதியில் உள்ளது. தெருக்களில் இருபுறம் அடர்ந்துள்ள செடிகளால் புதர்மண்டி உள்ளது. காட்டுபன்றி, காட்டுமாடு நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர். மொத்தத்தில் வார்டில் அடிப்படை வசதிகள் பின்தங்கி உள்ளன.

வாகனங்களால் இடையூறு



ரோஸி, குடும்பத்தலைவி : ரோட்டில் நிறுத்தும் வாகனங்களால் இடையூறு ஏற்படுவதால் பள்ளி குழந்தைகள், உடல் நலம் பாதித்தவர்களை வாகனங்களில் அழைக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். 6 குறுக்கு தெரு சந்து ரோடுகளும் குண்டு, குழியுமாக சேதமடைந்துள்ளது. சாக்கடை சரிவர கட்டமைக்காததால் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது.

பணிகளில் பாரபட்சம்



போஸ் ஜெகநாதன், கவுன்சிலர் (சுயே.,) : வார்டில் இதுவரை ரூ. 52 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன.

சுயேட்சை கவுன்சிலர் என்பதால் நகராட்சி வளர்ச்சி பணிகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. காட்டுமாடு, பன்றி பிரச்னையை குறித்து வனத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ரோட்டில் நிறுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பட்டா இல்லாத 32 வீடுகளுக்கு பட்டா கிடைக்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. வார்டில் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சியில் கோரிக்கை விடுத்தால் நிதி இல்லை என்கின்றனர்.

Advertisement