சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள கான்கிரீட் கழிவுகளை அகற்றுவதில் இரு துறையினர் இடையே போட்டி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் காமராஜர் வீதியில் சாலையோரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் உள்ள வணிக நிறுவனத்தினர் சிலர், தங்களது கடை முன், சாலையை ஆக்கிரமித்து ‛கான்கிரீட்' கலவை வாயிலாக சாய்தளம் அமைத்து இருந்தனர்.

இதனால், வடிகால்வாயில் மழைநீர் செல்லும் ஓட்டையில் அடைப்பு ஏற்பட்டதால், காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் மழை பெய்தபோது, வெளியேறாமல் சாலையிலேயே தேங்கியது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 'கான்கிரீட்' சாய்தளத்தை, கடந்த மாதம் 27ம் தேதி இடித்தனர். அவ்வாறு இடிக்கப்பட்ட கான்கிரீட் கழிவுகளை சாலையோரம் குவியலாக குவித்து வைத்தனர்.

கட்டட கழிவுகளை அகற்றாததால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கான்கிரீட் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள கால்வாய்யோரம் இருந்த ஆக்கிரமிப்பை நாங்கள் இடித்துள்ளோம். கான்கிரீட் கழிவுகளை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்ற வேண்டும்' என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நெடுஞ்சாலைத் துறையினர், அவர்களது பராமரிப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கும்போது, அந்த துறையினர்தான், கழிவையும் அகற்ற வேண்டும்' என்றார்.

காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாாக சாலையோரம் உள்ள கான்கிரீட் கழிவுகளை அகற்றுவதில், இரு துறையினரும் தட்டி கழிப்பவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Advertisement