நீர்த்தேக்க தொட்டிகளில் சுகாதாரம் கேள்விக்குறி

பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படாமல், சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக அரசு, குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பொதுமக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம், கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு கொண்டுவரப்படும் குடிநீர், மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகள் மூலம் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து பொதுமக்களுக்கு வினியோகமாகிறது.

பல்லடம் வட்டாரத்தில், அத்திக்கடவு, பில்லுார் மற்றும் மேட்டுப்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இவை சுகாதாரமான முறையில் தான் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பொதுமக்களுக்கு, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும்.

இதற்காக, ஒவ்வொரு நீர்த்தேக்க தொட்டிகளிலும் கடைசியாக சுத்தம் செய்த நாள் மற்றும் அடுத்து சுத்தம் செய்யப்பட வேண்டிய நாள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட வேண்டும். மேலும், கொசு புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் பிளீச்சிங் செய்யப்பட வேண்டும்.

ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் இவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. மாறாக, தொட்டிகள் புதர்கள் மண்டியும், பாசிகள் படர்ந்தும் சுகாதாரம் இன்றியே காணப்படுகின்றன.

அதிகாரிகளும் இது குறித்து ஆய்வு மேற்கொள்வதில்லை. எனவே, பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதுடன், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

Advertisement