காப்பீடு திட்டத்தை பயன்படுத்தி வசூல் வேட்டை; பா.ஜ., புகார்

பல்லடம்; மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை பயன்படுத்தி மோசடி நடந்து வருவதாக, பல்லடம் நகர பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

பல்லடம் நகர தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமையிலான பா.ஜ.,வினர் தாசில்தார், நகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆகியோரிடம் அளித்த மனு:

பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சில தினங்களாக, ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும், முதல்வர் காப்பீடு அடையாள அட்டை என்ற பெயரில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை பெறலாம் என்று கூறி, பொதுமக்களிடம் கார்டு பெறுவதற்காக பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கார்டு ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படும் வருகிறது.

ரூ.6 லட்சம் வசூல்



மத்திய அரசின் காப்பீடு திட்டத்துக்கு, 100 ரூபாய் வசூல் செய்வது தவறானது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களில் மட்டும், 6 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட அட்டையை பெற்றுக் கொண்டால், 5 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு வரலாம் என்று கூறி, பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் காப்பீடு திட்டத்தை மாநில அரசு இதுவரை இங்கு செயல்படுத்தவில்லை. எந்த மருத்துவமனையிலும் இதற்கு காப்பீடு தருவதில்லை.

மக்கள் ஏமாற்றமடைவர்



இந்த அட்டையை மக்கள் காப்பீடு திட்டம் என்று நினைத்து, அவசர காலகட்டங்களில் இதை பயன்படுத்தும் போது, 'இது காப்பீடு அட்டை அல்ல; வெறும் அடையாள அட்டை தான்' என்று தெரியும்போது மக்கள் ஏமாற்றம் அடைவர். இது மத்தியில் ஆளும் பா.ஜ., கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும்.

யாருடைய அனுமதியின் பேரில் இந்த மோசடி நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. அதிகாரிகளும் இது குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பது கேள்வியை எழுப்புகிறது. நுாதன மோசடியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement