அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்பவனே அறிவாளி பத்மஸ்ரீ விருதாளர் சந்திரமோகன் பேச்சு

விருதுநகர்: அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்பவனே அறிவாளி, என விருதுநகரில் நடந்த காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருதாளர் சந்திரமோகன் பேசினார்.

விருதுநகரில் 200வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. ஹட்சன் அக்ரோ நிறுவனத்தலைவர், மேலாண்மை இயக்குநர் பத்மஸ்ரீ சந்திரமோகன பங்கேற்றார்.

அவர் பேசியதாவது: இந்தத் துறை மட்டுமல்லாமல் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த எந்த துறையிலும் சாதிக்க முடியும். அதற்காக தங்களது இலக்கை நீங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். அதனையே குறிக்கோளாக கொண்டு, இலக்கை அடைவதற்கான வழிகளை அறிந்து கொண்டு தொடர் முயற்சி மூலமும், தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டும், தொடர் தோல்விகளினால் தொய்வு அடையாமல் ஒழுக்கத்துடன் தங்களது பணியை மேற்கொள்ளும் போது அந்த துறையில் நாம் சாதிக்க முடியும். இது ஒவ்வொருவராலும் முடியும்.அனைவரும் செய்வதை செய்யாமல், தனக்கான தனித்தன்மையோடும், புதுமையான படைப்பாற்றலோடும் செயல்பட வேண்டும். எந்த ஒரு சிக்கல்கள் வந்தாலும், உங்கள் மேல் உங்களுக்கான நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக வெல்ல முடியும். அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்பவனே அறிவாளி.

தடை என்பது வெற்றிக்கான படிக்கல்தான். உங்களுடைய உயரம் என்ன என்பதை உங்களுடைய எண்ணம் தான் தீர்மானிக்கிறது, என்றார். கலெக்டர் ஜெயசீலன் உடனிருந்தார். இதுவரை நடந்த 200 காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 12 ஆயிரம் பேர் வரை பயன்பெற்றுள்ளனர்.

Advertisement