ரூ.9.84 லட்சம் பண இரட்டிப்பு மோசடி மல்லிகை பூவை வைத்து ஏமாற்றிய தந்தை மகன் கைது

பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தும் மதுரை, ஆலங்குளத்தை சேர்ந்த அழகர்சாமியிடம் ரூ.9.84 லட்சம் பெற்று மோசடி செய்து பேக்கில் மல்லிகை பூவை வைத்து ஏமாற்றிய சித்தார்த்தன் அவரது மகன் விஸ்வாமித்திரனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, ஒத்த ஆலங்குளத்தைச்சேர்ந்தவர் அழகர்சாமி 51. திருமங்கலத்தில் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வருகிறார். செக்கானுாரணி புளியங்குளத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி மூலம் அழகர்சாமிக்கு, பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி, நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்த சித்தார்த்தன் 50, அறிமுகம் கிடைத்தது. 'பையில் பணம் வைத்து பூஜை செய்வேன். அப்போது உங்கள் பணம் இரட்டிப்பாக கிடைக்கும்' என அழகர்சாமியிடமும், அவரது நண்பர் பொன்ராஜிடமும் சித்தார்த்தன் கூறியுள்ளார். இதனை நம்பி கடந்த மே 29 ல் பல தவணைகளாக அலைபேசி மூலம் ரூ.2.42 லட்சமும், நேரடியாக ரூ.7.42 லட்சம் என மொத்தம் ரூ.9.84 லட்சத்தை சித்தார்த்தனிடம் அழகர்சாமி கொடுத்துள்ளார். பின்னர் சித்தார்த்தன் வீட்டில் அவரது மகன் விஸ்வாமித்ரன் 21. புரோக்கர் முருகேஸ்வரி ஆகியோர் பணம் உள்ள பையை வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பிறகு அழகர்சாமியிடமும், பொன்ராஜிடம் தலா ஒரு பையை கொடுத்துள்ளார். இருவரும் வீட்டிற்கு சென்று பேக்கை திறந்து பார்த்தபோது மல்லிகைப்பூ தான் இருந்துள்ளது. ஏமாற்றப்பட்டதை தெரிந்த அழகர்சாமி, பொன்ராஜ் டி.கள்ளிப்பட்டிக்கு சென்று சித்தார்த்தனிடம் பணம் கேட்டு உள்ளனர். சித்தார்த்தன் இருவரையும் கொலை செய்துவிடுவேன்' என மிரட்டியுள்ளார். அழகர்சாமி போலீசில் புகார் செய்தார்.

சித்தார்த்தன், விஸ்வாமித்திரனை தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் கைது செய்தார்.

இன்ஸ்பெக்டர் கூறியதாவது: அழகர்சாமியிடம் சித்தார்த்தன், மேலும் ரூ.50 லட்சம் கொடுத்தால் ரூ.13 கோடி தருவதாக கூறியுள்ளார். இந்த நுாதன மோசடியில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

Advertisement