தென்காசி பைபாஸ் ரோடு பணிகள் தாமதம் சுற்றுலா பயணிகள் அவதி

தென்காசி:தென்காசியின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ள பைபாஸ் ரோடு பணி மிகுந்த தாமதமாக நடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் ஊருக்குள் சென்று செங்கோட்டை செல்லவோ, மதுரை சாலையில் செல்லவோ மிகுந்த சிரமப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

எனவே திருநெல்வேலி சாலையில் தென்காசியின் துவக்க இடமான ஆசாத் நகரில் துவங்கி யானைப் பாலம் வழியாக இலஞ்சி சவுக்கை முக்கு வழியாக தற்போது புதிதாக பணிகள் நடந்து வரும் திருமங்கலம் ------------------- கொல்லம் 4 வழிச் சாலையில் இணைக்கும் பைபாஸ் சாலை திட்டம் உள்ளது. 7 கிலோமீட்டர் துாரம் உள்ள இந்த திட்டத்திற்காக ரூ. 33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலமும் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில் ஜரூராக நடக்காமல் கிடப்பில் கிடக்கின்றன.

இந்த சீசனுக்கு முன்பாகவே பணியில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதும் ஆமை வேகத்திலேயே நடக்கிறது.

அரசு நிலங்களை கையகப்படுத்தி திட்டத்திற்கு நிதி வழங்கிய பிறகும் ஒப்பந்ததாரர்களால் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே தென்காசி பைபாஸ் ரோடு பணியை விரைவு படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement