'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு கனடா அழைப்பு

புதுடில்லி: கனடாவில் நடக்கவுள்ள, 'ஜி - 7' உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு.

இந்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த அமைப்பின் உச்சி மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் பங்கேற்பது வழக்கம். கடந்த 2022-ல் ஜெர்மனியில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும், 2023-ல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் செயல்திட்டங்கள் வகுப்பு கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். நடப்பாண்டிற்கான ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு கனடாவில் வரும் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க, இந்தியாவுக்கு கனடா தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்படாமல் இருத்தது. காலிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தால், பிரதமர் மோடி கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியானது. இந்நிலையில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவு:

கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்தது. சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இந்த மாத இறுதியில் கனடாவில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

இந்தியாவும், கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் நலன்களால் வழிநடத்தப்படுவதுடன், புதுப்பிக்கப்பட்டு இணைந்து செயல்படும். உச்சி மாநாட்டில் எங்கள் சந்திப்பை எதிர்நோக்குங்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement