அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு ஜூலை 11க்கு ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:2006 - -2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்தது. கடந்த ஆண்டு அவரை வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கினை மறு ஆய்வு செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் முதலில் இருந்து வழக்கினை தினமும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவினை எதிர்த்து அமைச்சர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை வழங்கப்பட்டது. ஆனாலும் ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு வாய்தா போடப்பட்டு வருகிறது.

இதன்படி நேற்று இந்த வழக்கின் வாய்தா இருந்த நிலையில் உச்சநீதிமன்ற தடை உத்தரவு தொடர்வதால் வழக்கின் விசாரணையை, ஜூலை 11க்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.

Advertisement