மார்ச்சுவரியில் மனித நேயம் மறைந்துபோனதா

1

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் காத்திருப்போர் தங்களது உறவினர் உடலை பெறும் வரை மணிக்கணக்கில் வாசல் முன்பாக நின்று கொண்டே வேதனைப்படுகின்றனர்.

தற்கொலை, கொலை, விபத்தில் அடிபட்டு இறப்பவர்களின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின்பே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

முதல்நாள் மதியத்திற்கு மேல் அரசு மருத்துவமனை வார்டு அல்லது தனியார் மருத்துவமனையில் இருந்து பெறப்படும் உடல் மார்ச்சுவரியில் பாதுகாக்கப்பட்டு மறுநாள் காலையில் தான் பரிசோதனைக்கு வரும். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் உறவினர்கள் மருத்துவமனையே கதி என காத்திருக்க வேண்டும். காலை 10:00 மணிக்கே வந்து உறவினர்கள் காத்திருந்தாலும் முதல் உடலாக பரிசோதனை செய்து முடித்து வெளியே வரும் போது மதியம் 12:00 மணியை தொட்டு விடும்.

இது கூடுதல் துக்கம் தான்



எப்போது பரிசோதனை முடியும் என தெரியாமல் காலை முதல் மாலை வரை காத்திருக்கும் கொடுமையும் உண்டு. உறவை இழந்த துக்கத்தில் தேம்பி அழுது கொண்டிருப்பவர்களை யாராலும் தேற்ற முடியாது.

குறைந்தபட்சம் இருக்கைகள் இருந்தாலாவது அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்வர். அவ்வளவு பெரிய வளாகத்தில் ஒரு இருக்கை வசதி கூட இல்லை. மதியம் 11:00 மணிக்கு மேல் கொளுத்தும் வெயிலில் சிறு மரங்களின் நிழலில் நுாறு பேர் வரை ஒதுங்கி நிற்பது வேதனை. குடிநீரும் இல்லை, கழிப்பறை வசதியும் இல்லை. இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் நின்று கொண்டே தேம்புவது பார்ப்போரை வேதனைப்படுத்துகிறது.

மற்ற வார்டுகளில் வசதிகள் செய்து கொடுப்பதை விட மார்ச்சுவரிக்கு தான் கூடுதல் மனிதாபிமானமும் கவனிப்பும் தேவை. இருக்கையும் கூரையும் இன்றி துக்கத்தோடு கூடுதல் வேதனையை அனுபவிப்பவர்களின் துயர் துடைக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வரவேண்டும்.

Advertisement