தமிழகம், புதுச்சேரியில் 10 முதல் கனமழை: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில், வரும் 10 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

தமிழகம் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மறுநாள், இடி மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 10ல் கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 12 வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக் கூடும்.

10 இடங்களில் சதம்



நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது. 39.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

இதற்கு அடுத்தபடியாக, பாளையங்கோட்டையில், 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement