நார்வே செஸ் போட்டியில் 7வது முறை பட்டம் வென்றார் கார்ல்சன்; 3வது இடத்தை பிடித்தார் குகேஷ்!

1


ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில், 7வது முறையாக மேக்னஸ் கார்ல்சன் பட்டம் வென்றார். உலக சாம்பியன் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தார்.


நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடக்கிறது. இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து குகேஷ் விளையாடினார். சிறு சிறு தவறுகள் காரணமாக, குகேஷ் கருவானாவிடம் வீழ்ந்தார்.


கடந்த சுற்றில் சிறப்பாக விளையாடிய, குகேஷ் கடைசி சுற்றில் தோல்வி அடைந்தார். அதேநேரத்தில், 10வது சுற்றில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால் கார்ல்சன் 7வது முறையாக பட்டம் வென்றுள்ளார். 10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளார். கருவானா 15.5 புள்ளிகளுடனும் (2வது இடம்), குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் (3வது இடம்) உள்ளனர்.

கார்சல்சன் சொன்னது இதுதான்!



பின்னர் நிருபர்கள் சந்திப்பில், கார்ல்சன் கூறியதாவது: நான் சிறப்பாக உணர்கிறேன். வெற்றி பெற்றது நிம்மதி அளிக்கிறது. போட்டி முடிவு ரோலர்கோஸ்டர் போன்று இருந்தது. ஆனால் நன்றாக இருந்தது.



இந்தியாவின் குகேஷ் மற்றும் எரிகைசி மிகவும் நல்லவர்கள். அவர்கள் நன்றாக விளையாடினார்கள். அவர்கள் இன்னும் தங்களை தயார்படுத்தி கொள்ள சிறிது நேரம் எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


6வது சுற்று போட்டியில், தனது தோல்வி உறுதியானது எனத் தெரிந்ததும், ஆக்ரோஷமாக கார்ல்சன் 'டேபிளில்' ஓங்கி குத்தினார். பின் சுதாரித்த கார்ல்சன், குகேஷிடம் கைகொடுத்து விட்டு, வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பேசும் பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement