ரூ.3,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி எஸ்.ஐ.,க்கு 4 ஆண்டு சிறை
புதுடில்லி:டெம்போ வேன் டிரைவரிடம், 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போக்குவரத்துப் பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி ஆசாத் மார்க்கெட்டுக்கு, 2016ம் ஆண்டு ஆகஸ்ட், 19ம் தேதி டெம்போ வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்திய உதவி சப்-இன்ஸ்பெக்டர் யதேந்தர் குமார், வேனை தடுத்து நிறுத்தினார். வண்டியின் ஆவணங்களை ஆய்வு செய்த பின், 3,000 ரூபாய் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் வேனை பறிமுதல் செய்வதாக டிரைவர் முன்னாவை மிரட்டினார். பயந்து போன டிரைவர் முன்னா, 3,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தார். ஆனால், லஞ்ச ஒழிப்புப் பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் செய்தார்.
வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், விசாரணை நடத்தி யதேந்தர் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3,000 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீபாலி சர்மா பிறப்பித்த உத்தரவு:
நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் மிக முக்கியமான தடை. பொது வாழ்வில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையுடன் இருக்க வேண்டும். அரசுத் துறைகளில் ஊழலை ஒழிக்கத்தான் ஊழல் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. உதவி சப்-இன்ஸ்பெக்டர் யதேந்தர் குமார், தனது ஆதாயத்துக்காக தன் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். குற்றத்தின் விளைவுகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, குற்றவாளியான யதேந்தர் குமார் எந்த கருணையும் பெறத் தகுதியற்றவர்.
யதேந்தர் குமாருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.