டில்லியில் பக்ரீத் கொண்டாட்டம்

புதுடில்லி,:தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. டில்லியில் ஜூம்மா மசூதி உட்பட பல இடங்களில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை நடத்தி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மாநகர் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஜூம்மா மசூதி, பதேபுரி மசூதி, சீலம்பூர், ஓக்லா மற்றும் நிஜாமுதீன் உள்ளிட்ட மசூதிகளில் அதிகாலையிலேயே ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என முஸ்லிம்கள் கூட்டம் அலைமோதியது. சிறப்புத் தொழுகை முடிந்தவுடன், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மாநகர் முழுதும் முக்கிய இடங்களில் விரைவு அதிரடிப் படை, துணை ராணுவப் படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மாநகர் முழுதும் பல இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது.

திறந்தவெளியில் ஆடு வெட்ட அரசு தடை விதித்திருந்தது. அதேபோல, பொது இடங்களில் அனுமதி இல்லாமல் சிறப்புத் தொழுகை நடத்த போலீஸ் தடை விதித்திருந்தது.

Advertisement