காலிண்டி கஞ்ச் சந்திப்பில் மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு

புதுடில்லி:காலிண்டி குஞ்ச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது”

ஓக்லா தடுப்பணை அருகே, டில்லி - -நொய்டா சாலை மற்றும் ஆக்ரா கால்வாய் சாலையை இணைக்கும் காலிண்டி கஞ்ச் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தெற்கு டில்லி, நொய்டா மற்றும் பரிதாபாத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் காலிண்டி குஞ்ச் சந்திப்புக்கு வருவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் கடும் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, காலிண்டி கஞ்ச் சந்திப்பில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்க ஆலோசனை நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் தாக்கல் செய்ய, 23ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 500 மீட்டர் தூரத்துக்கு இன்டர்சேஞ்ச் வசதி திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கட்ட 500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த, 2022ம் ஆண்டு, உத்தர பிரதேச மாநில பொதுப்பணித் துறை இந்த நெரிசலை தீர்க்க ஆய்வு நடத்தியது. அதன்பின், தாக்கல் செய்த அறிக்கையில், காலிண்டி கஞ்ச் சந்திப்பில் இடைமாற்றம் மற்றும் மேம்பாலம் கட்ட பரிந்துரை செய்திருந்தது.

மேலும், காலிண்டி கஞ்ச் மெட்ரோ ரயில் நிலையம், டில்லி, நொய்டா மற்றும் பரிதாபாத் இடையே பயணிப்போரிடம் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது.

சமீபத்தில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா இடையேயான சந்திப்பின் போது, காலிண்டி கஞ்ச் நெரிசல் குறித்து விவாதித்தனர். இதைத் தொடர்ந்தே, காலிண்டி கஞ்ச் சந்திப்பில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement