தடகளம்: இந்தியாவுக்கு 6 தங்கம்

தைபே சிட்டி: தைவான் தடகளத்தின் முதல் நாளில் இந்திய நட்சத்திரங்கள் ஆறு தங்கப்பதக்கள் கைப்பற்றினர்.
தைவானின் தைபே சிட்டியில் சர்வதேச தடகள ஓபன் நடக்கிறது. முதல் நாளில் இந்திய நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட்டனர். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி பங்கேற்றார். சமீபத்தில் (மே 29) ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தார். இம்முறை பைனலில் அசத்திய ஜோதி, 12.99 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் தேஜாஸ் ஷிர்சே 23, பங்கேற்றார். பைனலுக்கு முன்னேறிய இவர், 13.52 வினாடி நேரத்தில் வந்து தங்கம் வசப்படுத்தினார். இது இவரது இரண்டாவது சிறந்த ஓட்டமாக (முன்னதாக 13.41 வினாடி) அமைந்தது.
ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர், 16.21 மீ., துாரம் தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 1500 மீ., ஓட்டம் நடந்தது. இதில் அசத்திய இந்தியாவின் பூஜா, 4 நிமிடம், 11.63 விநாடி நேரத்தில் வந்து தங்கம் வசப்படுத்தினார்.
பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் ஸ்நேகா, நித்யா, சுதீக் ஷா, தமிழகத்தின் அபிநயா இடம் பெற்ற அணி களமிறங்கியது. 44.07 வினாடி நேரத்தில் வந்த இந்திய அணி, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. இது தைவான் ஓபன் தடகளத்தில் சாதனை ஆனது. முன்னதாக 2021ல் இந்தியாவின் அர்ச்சனா, தனலட்சுமி, ஹிமா தாஸ், டுட்டீ சந்த் இடம் பெற்ற அணி, 44.60 வினாடி நேரத்தில் வந்து இருந்தது.
ஆறு தங்கம்
ஆண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் குரிந்தர்விர், அனிமேஷ், மணிகண்டா, அம்லன் இடம் பெற்ற அணி பங்கேற்றது. பைனலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 38.75 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் வசப்படுத்தியது.
நேற்று இந்தியா பங்கேற்ற 6 போட்டிகளிலும் தங்கப்பதக்கம் கைப்பற்றியது.

Advertisement