நாயக்கர் கால சதிக்கற்கள் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு

செஞ்சி : செஞ்சி அருகே நாயக்கர்கள் காலத்து சதி கற்கள் இருப்பது கண்டுபிடித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மாதப்பூண்டி கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மேற்கொண்ட கள ஆய்வில், நாயக்கர் காலத்தை சேர்ந்த சதி கற்கள் இருப்பதை கண்டுபிடித்தார்.

இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது:

மாதப்பூண்டி கிராமத்தில் நந்தன் கால்வாய்க்கு அருகில் இரண்டரை அடி உயரம், 4 அடி அகலம் உள்ள பலகை கல்லில் ஆண், பெண் இருவரின் உருவம், புடைப்பு சிற்பம் ஒன்று உள்ளது.

அள்ளி முடிக்கப்பட்ட கொண்டையுடன் கைகூப்பிய நிலையில் ஆண் சிற்பமும், அருகில் ஆடை அலங்காரத்துடன் பெண் சிற்பம் உள்ளது. பெண்ணின் கூந்தல் இடது பக்கம் சரிந்தும், தொங்கவிடப்பட்டுள்ள இடது கையில் குடுவை போன்ற பொருளும் உள்ளது. இவர்கள் அரசன், அரசியாக இருக்கலாம்.

இதற்கு சற்று துாரத்தில் உள்ள சிற்பத்தில் ஆண் தனது வலக்கையில் நீண்ட வாளுடன் போர் வீரன் போன்றும், அவருக்கு அருகில் பெண் சிற்பம் ஒன்றும் உள்ளது.

மூன்றாவதாக இடம்பெற்றுள்ள சிற்பம் சிதைந்து தெளிவில்லாமல் உள்ளது.

இந்த சிற்பங்கள் கி.பி., 16 -17ம் நுாற்றாண்டில் செஞ்சி கோட்டையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் காலத்தை சேர்ந்த சதி கற்கள் எனப்படும் சிற்பங்கள்.

இந்த கால கட்டத்தில் மன்னர் அல்லது படைத்தலைவர்கள் போரில் உயிர் துறந்தால் அவர்களின் மனைவியரும் உடன் தீக்குளித்து இறப்பது வழக்கம். அப்படி உயிர் நீத்த பெண்களுக்கு நினைவுக் கற்கள் வைத்து தீப்பாய்ந்த அம்மன் என வட தமிழ்நாட்டில் வணங்கி வருகின்றனர்.

குறிப்பாக செஞ்சி பகுதியில் இது போன்ற சிற்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. மேலச்சேரி வனப்பகுதியில் தீப்பாய்ந்த அம்மன் கோயில் இருப்பதும், 400 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் தீப்பாய்ந்த அம்மன் வழிபாடு இருப்பதும் தெரிய வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement