பயங்கரவாதிகளை வைத்து மோதலை விரும்பும் பாகிஸ்தான்; ரவி சங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

பெர்லின்: பயங்கரவாதிகளை கருவியாக வைத்து இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாக பா.ஜ., எம்.பி., ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.


பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்கவும், பயங்கரவாதத்திற்கு துணைபோகும் பாகிஸ்தான் குறித்து விளக்குவதற்காக, பா.ஜ., எம்.பி., ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான மத்திய குழு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தக் குழு ஜெர்மனியில் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினர்.


இதனிடையே, பெர்லினில் இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது; பிரதமர் மோடியின் தலைமையில் ஐ.டி., விண்வெளி உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உலகளவில் மொபைல் போன்களை தயாரிக்கும் 2வது மிகப்பெரிய நாடாக இந்திய திகழ்கிறது.

பாகிஸ்தான் செய்வது என்னவென்றால், பயங்கரவாத இயந்திரங்களை உருவாக்குவதுதான். அவர்களின் ராணுவ ஜெனரல்களின் கீழ் உலகத் தரம் வாய்ந்த பயங்கரவாதிகளை எப்படி உருவாக்குவது என்பதை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் 4 முறை எங்களை தாக்கியுள்ளனர். ஒவ்வொரு முறையும் தோற்றுள்ளனர். நாங்கள் ஒருபோதும் தாக்கவில்லை. போரை ஆரம்பிப்பவர்கள் எப்போதும் அவர்கள்தான்.


ஏன் என்றால், அங்கே அரசியல் தலைவர்கள் அல்ல, ஜெனரல்களின் கட்டுப்பாட்டில்தான் நாடு செயல்பட்டு வருகிறது. ஜெனரல்கள் தங்கள் முக்கியத்துவத்தை நிலைநாட்ட இதுபோன்ற தாக்குதல்களை விரும்புகிறார்கள். அதற்கான கருவிகளே பயங்கரவாதிகள். உலகில் எங்கே பயங்கரவாதி இருந்தாலும், அவன் ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருக்கிறான் அல்லது பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவனாக இருக்கிறான், எனக் கூறினார்.

Advertisement