சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகள் மழை, வெயிலால் பயணியர் தவிப்பு

திருவள்ளூர்:சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் இருந்து திருப்பதி, திருத்தணி, அரக்கோணம், ஊத்துக்கோட்டை, கடம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு அலுவல் பணி காரணமாக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இவர்கள், பேருந்துகளில் பயணம் செய்வதற்கு வசதியாக, கலெக்டர் அலுவலகத்தின் வெளியில் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. ஆனால், சிறிய அளவிலேயே நிழற்குடை உள்ளதால், 10 பயணியர் கூட நிற்க முடிவதில்லை.

மேலும், பேருந்துகளும் நிழற்குடை அருகே நிற்காமல், சாலை நடுவே நின்று செல்கின்றன. இதனால், பயணியர் பேருந்தில் அமர இருக்கை பிடிக்கும் ஆர்வத்தில் வெயில், மழையை பொருட்படுத்தாமல், சாலையிலேயே நிற்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, கலெக்டர் அலுவலகம் முன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும், மாலை நேரத்தில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

எனவே, மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டு, சாலையில் பேருந்துகளை நிறுத்தாமல், பயணியர் நிழற்குடை அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement