அரசு டாக்டர் வேலை தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் கைது

நாகர்கோவில்:அரசு டாக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி கன்னியாகுமரி ஆசிரியரிடம் ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்த வேலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காங்கரையைச் சேர்ந்தவர் சோமன் நாயர், 58, பள்ளி ஆசிரியர். இவரது மகள் சேலம் தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.

சமீபத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை எழுதியிருந்தார். சோமன் நாயர், ஜன., 7ல் சென்னை தேர்வாணைய அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது, வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், சோமன் நாயரிடம், 'தேர்வாணைய தலைவரின் டிரைவர்' என்று கூறி அறிமுகமானார்.

பின், சோமன் நாயரை தொடர்பு கொண்ட சதீஷ், 'உங்கள் மகளின் தேர்வு முடிவு சீனியாரிட்டி 510வது இடத்தில் இருக்கிறது. 20 லட்சம் ரூபாய் தந்தால் அவருக்கு அரசு டாக்டர் வேலை கிடைக்கும்' என்றார்.

அதை நம்பிய சோமன் நாயர், முன் தொகையாக ஆறு லட்சம் ரூபாயை வழங்கினார். இந்நிலையில் மே 2 ல் தேர்வு முடிவு வெளியான போது சோமன் நாயரின் மகள் பெயர் இடம் பெறவில்லை.

சதீஷிடம் கேட்டபோது 'அடுத்தகட்டமாக 40 பேர் பெயர் பட்டியல் வெளியாகிறது. அதில் உங்கள் மகளுக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும்' என்றார். இதை ஏற்காத சோமன் நாயர், பணம் கேட்டார்.

பின், திருவட்டார் போலீசில் அவர் புகார் செய்தார். பணத்தை சதீஷுக்காக வாங்கிய லோகேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சதீஷ் குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement