நாய்களை பிடிப்பதாக உறுதி விவசாயி போராட்டம் வாபஸ்

பள்ளிப்பாளையம்,:பத்து நாளில் வெறிநாய்களை பிடிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால், இரண்டாவது நாளாக களியனுார் பஞ்., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயி, போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன், 50, விவசாயி. கடந்த பிப்., 24ல் வெறிநாய் கடித்ததில், மகேஸ்வரன் வளர்த்து வந்த ஆடு இறந்தது. இறந்த ஆட்டை, களியனுார் பஞ்., அலுவலகம் முன் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வெறிநாய்கள் கடித்துக் குதறியதில், மகேஸ்வரன் வளர்த்த கோழிகள் இறந்தன.

இனால், ஆத்திரமடைந்த மகேஸ்வரன், இறந்த கோழியுடன் களியனுார் பஞ்., அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது நாளாக, நேற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நேற்று மதியம், 2:30 மணிக்கு அதிகாரிகள் அவரிடம் பேச்சு நடத்தினர்.

அப்போது, 10 நாட்களில் வெறிநாய்களை பிடிப்பதாக தெரிவித்தனர். அதையடுத்து, தர்ணா போராட்டத்தை விவசாயி மகேஸ்வரன் வாபஸ் பெற்றார்.

இதுகுறித்து, மகேஸ்வரன் கூறும்போது, ''அடுத்த 10 நாட்களில் வெறிநாய்களை பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தர்ணா போராட்டம் தொடரும்,'' என்றார்.

Advertisement