வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு லட்சம் கவுன்சிலர், தே.மு.தி.க. பிரமுகர் மீது வழக்கு
நாகர்கோவில்,:வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கொல்லங்கோடு நகராட்சி கவுன்சிலர், தே.மு.தி.க. பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரள எல்லையான கொல்லங்கோட்டை சேர்ந்தவர் ரோபின் 35. ஆட்டோ டிரைவர் ஒருவரை தாக்கியதாக ரோபினை கொல்லங்கோடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யும் முயற்சியில் ரோபினின் அக்கா ரீனா 44, கொல்லங்கோடு நகராட்சி கவுன்சிலர் ஸ்டீபனை சந்தித்தார். அவர் தே.மு.தி.க. பிரமுகர் செல்வர்ட் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவர் ஒரு லட்ச ரூபாய் தந்தால் வழக்கே இல்லாமல் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ரீனா செல்வர்டுக்கு ரூ. ஒரு லட்சத்தை இணையவழியில் அனுப்பி வைத்தார். ஆனால் அவர் சொன்னபடி வழக்கு ரத்து செய்வதற்கான நடவடிக்கை தொடங்கவில்லை.
இந்நிலையில் செல்வர்ட்டிடம் ரீணா மற்றும் உறவினர்கள் பணத்தைக் கேட்டு வற்புறுத்தினர். அப்போது தான் 30 ஆயிரம் மட்டுமே எடுத்ததாகவும், மீதி 70 ஆயிரத்தை ஸ்டீபனிடம் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். ரூ.30 ஆயிரத்தை திருப்பிப் தருவதாக எழுதிக் கொடுத்தார். பின்னர் ரீனாவை வழிமறித்து செல்வர்ட் மிரட்டியுள்ளார். ரீனா அளித்த புகாரின் பேரில் செல்வர்ட், ஸ்டீபன் மீது கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிவு செய்தார்.