நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு.. அபாயம்; வறட்சியால் கண்மாய்களில் வற்றும் தண்ணீர்

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் கண்மாய், குளங்களில் உள்ள தண்ணீர் வேகமாக ஆவி ஆவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2ம் போகம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்பட மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களிலும் மழைக்காலத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர், தற்போது நிலவும் கடும் வறட்சியால் வேகமாக வற்றி வருகிறது.

குறிப்பாக கடந்த ஒரு மாதமாக நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக கண்மாய், குளங்களில் தேங்கியுள்ள தண்ணீர் விரைவாக ஆவி ஆகி நாளுக்கு நாள் கண்மாய்களில் உள்ள தண்ணீர் குறைந்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நெல் அறுவடை செய்யப்பட்டபோது 4.5 அடி தண்ணீர் இருந்தது.

தற்போது ஒரு அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதே போன்று மாவட்டத்தில் கண்மாய், குளங்களில் தேங்கியிருந்த தண்ணீரை பயன்படுத்தி கோடை சாகுபடியாக நெல், எள், பருத்தி, பயறு வகைகள் உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் பயிர் செய்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நிலவும் வறட்சியால் கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கண்மாய், குளங்களில் வேகமாக தண்ணீர் வற்றி வரும் நிலையில் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகின்றன. ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சில மாதங்கள் வரை 15 அடி முதல் 20 அடிக்குள் நிலத்தடி நீர்மட்டம் கிடைத்து வந்த நிலையில் தற்போது 25 அடி முதல் 35 அடி வரை ஆழ்துளை கிணறு தோண்டினால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் பிரச்னை தலை துாக்கும் அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

---

Advertisement