நேற்று 18 பேருக்கு காய்ச்சல் முகக்கவசத்தை மறக்காதீங்க...

மதுரை: சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் படி மதுரையில் நேற்று 18 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 35 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 35 பேர் நேற்று காய்ச்சலுக்கு புறநோயாளியாக சிகிச்சை பெற்றனர். 35 பேர் உள்நோயாளியாக பல்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


டாக்டர்கள் கூறியதாவது:

தினமும் சராசரியாக 15 முதல் 20 பேர் வரை காய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். டெங்கு காய்ச்சலோ, கொரோனா தொற்றோ பதிவாகவில்லை. தற்போது வரை கொரோனா தொற்றுக்கான சளிப்பரிசோதனை செய்யப்படவில்லை. கூட்டமான இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்ப்பதே நல்லது. அல்லது முகக்கவசம் அணிந்து செல்லலாம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கைகளை முகத்தில் தொடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



வீட்டில் யாருக்காவது காய்ச்சல் வந்தால் கை வைத்தியம் பார்க்காமல் மருத்துவமனைக்கு செல்வது அவசியம். காற்றின் மூலம் வைரஸ் பரவும் என்பதால் இருமல், தும்மல் வந்தால் கர்சீப்பால் முகத்தை மூடி மற்றவர்களுக்கு பரப்பாமல் தவிர்க்க வேண்டும் என்றனர்.

Advertisement