குமரிக்கல்பாளையம் 'நடுகல்' பாதுகாக்கப்பட்ட சின்னமாகிறது

திருப்பூர்: : ''குமரிக்கல்பாளையத்தில் உள்ள தொல்லியல் எச்சங்கள், வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது'' என, மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.இங்குள்ள 26 அடி உயர நெடுநிலை நடுகல்லை, பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊத்துக்குளி வட்டம், குமரிக்கல்பாளையத்தில், 3,000 ஆண்டு பழமையான தொல்லியல் எச்சங்கள் இருப்பதால், அவற்றை பாதுகாக்க வேண்டும் என, அங்குள்ள மக்கள் வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தியும், அந்த இடத்துக்கு அருகே மின் பகிர்மான கழகம் சார்பில், துணை மின் நிலையம் அமைக்கும் முயற்சியை எதிர்த்தும், 2 ஆண்டுக்கும் மேலாக, தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் நடத்தி வந்தனர்.இதற்கிடையில், தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன், திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:

குமரிக்கல்பாளையத்தில் காணப்படும், 26 அடி உயர நெடுகல், தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. இதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெருங்கற்கால சின்னங்களான கல்வட்டங்கள், முதுமக்கள் தாழி துவங்கி, தொடக்க வரலாற்று காலத்தை சார்ந்த பலவகையான பானை ஓடுகள் வரை உள்ளன. வரலாற்று காலத்தைச் சேர்ந்த நடுகல் மற்றும் பல்வேறு கால கட்டங்களை சேர்ந்த கல்வெட்டுகள் என, தொடர்ச்சியான வரலாற்று சான்றுகள், இப்பகுதியில் காணப்படுகின்றன. எனவே, குமரிக்கல்பாளையம், தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

இதை, எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பது நம் கடமை. எனவே, அங்குள்ள குத்துக்கல் என்கிற நெடுநிலை நடுகல்லை, தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க, உரிய பரிந்துரையை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement