18 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட கோவை தினசரி ரயில் இயக்கப்படுமா

ராமேஸ்வரம் : 18 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் டூ கோவை தினசரி ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாம்பன் கடலில் 1914ல் பாலம் அமைத்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கினர். 93 ஆண்டுகளுக்கு பின் ராமேஸ்வரம்- மதுரை இடையே 2007ல் அகல ரயில் பாதையாக மாற்றினர்.

அன்று முதல் பல ஆண்டுகளாக ராமேஸ்வரம் முதல் கோவை இடையே இயக்கப்பட்ட பகுதி நேர எக்ஸ்பிரஸ் ரயில் (ராமேஸ்வரம் டூ மதுரை வரை பாசஞ்சர் ரயில், மதுரை டூ கோவை வரை எக்ஸ்பிரஸ் ரயில்) நிறுத்தப்பட்டது.

கடந்த 18 ஆண்டுகளாக ராமேஸ்வரம் டூ கோவைக்கு ரயில் போக்குவரத்து இல்லாமல் கோவையில் கல்வி பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் ரயிலில் செல்ல முடியாமல் அரசு பஸ், வாகனத்தில் பயணிக்கின்றனர்.

மேலும் கோவையில் இருந்து இயந்திர பாகங்கள், ஜவுளிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கவும், இதனை பாதுகாப்பாக எடுத்து வர ரயில் வசதி இன்றி வணிகர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.

ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்க முன்னாள் தலைவர் என்.ஜெயகாந்தன் கூறுகையில், பாம்பன் கடலில் வலுவான புதிய பாலம் அமைத்து ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைத்து மீண்டும் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தை துவங்கியதும் தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

எனவே அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி 18 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ராமேஸ்வரம் டூ கோவை தினசரி ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement