நகராட்சியில் 'கண்டமான' வாகனங்கள்;   விஷப்பூச்சிகளின் கூடாரமாகும்  அபாயம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நகராட்சிகளின் வாகனங்கள் பல ஆயுள் முடிந்து கண்டமாகி தற்போது வரை பயன்பாட்டிற்கு எதுவும் உதவாமல் அப்படியே போடப்பட்டுள்ளன. இவற்றை அகற்றினால் அவை விஷப்பூச்சிகளின் கூடாரமாவது தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் என 5 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் துாய்மை பணிகள் அனைத்தும் தனியாருக்கு விடப்பட்டுள்ளன. நகராட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த லாரிகள், மினிலாரிகள் ஆகியவை துாய்மை பணி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளன. அதை எப்.சி., பார்ப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவர்களே செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல நகராட்சிகளில் ஆயுள் முடிந்த லாரிகள், மினிலாரிகள் நகர் பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லாததால் நீண்ட காலமாக அங்கேயே கிடந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாகும் அபாயம் உள்ளது. இவை நுண் உர கூடங்கள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளின் அருகே நிறுத்தப்படுவதால் அச்சம் அதிகம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து நகராட்சிகளில் செயல்படாமல், ஆயுள் முடிந்து கண்டமான லாரிகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில நகராட்சிகளில் கூடுதல் வாகனங்கள் தேவையாக உள்ளது. துாய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் எலக்ட்ரிக் வண்டிகள் அடிக்கடி பழுதாகின்றன. இதுபோன்ற பிரச்னைகளால் குப்பை அள்ளுவது, பணிகளை சரி செய்வதில் சுணக்கமும் நீடிக்கிறது.

நகராட்சிகளில் வாகன மேலாண்மை என்பது மிகவும் அவசியம். அடிப்படை பணிகளில் உள்ள பிரச்னைகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த வாகனங்களை முறைப்படி பராமரிக்கவும், பழுதான வண்டிகளை உடனடியாக சரி செய்யவும், முடங்கி கிடக்கும் வாகனங்களை கண்டம் ஆக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement