தமிழகம், புதுச்சேரியில் 13ம் தேதி வரை மழை

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 13ம் தேதி வரை மழை பெய்யவும், 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யலாம். நாளை மற்றும் நாளை மறுநாள் மழையுடன், 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். குறிப்பாக, கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 11ம் தேதி, கடலுார், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும். 12ம் தேதி, வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் கனமழையும்; 13ம் தேதி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலையில் இன்று பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

அதேநேரம், நாளை முதல் 11ம் தேதி வரை வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் வரை குறையக்கூடும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட 1 முதல் 3 செல்ஷியஸ் அதிகமாக இருக்கும் நிலையில் அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸை ஒட்டியும் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement