ஆடவள் அரங்கம் கட்டுரை

பெங்களூரை சேர்ந்த டாக்டர் தம்பதியான ஜனார்த்தன் மூர்த்தி - ஷோபா மகள் ராஜலட்சுமி, 39. அரசு சாரா நிறுவனமான எஸ்.ஜே., அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையானது மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் கொடுப்பதுடன் மட்டுமின்றி பல் டாக்டர், கல்வியாளர், மிஸ் இந்தியா சக்கர நாற்காலி போட்டி வெற்றியாளர், உத்வேகம் அளிக்கும் பேச்சாளர் என்று பன்முக தன்மை கொண்டவராக உள்ளார்.

ராஜலட்சுமியும் மாற்றுத்திறனாளி தான். ஆனால் பிறந்ததில் இருந்தோ, வளர்ந்த பின் ஏற்பட்ட நோயாலோ அவர் மாற்றுத்திறனாளி ஆகவில்லை. 2007ம் ஆண்டு நடந்த ஒரு விபத்து அவரது வாழ்க்கையை புரட்டி போட்டது. பெங்களூரில் இருந்து சென்னைக்கு அவர் காரில் சென்றபோது துாக்க கலக்கத்தில் கார் டிரைவர், லாரி மீது மோதி மோதியதில் ராஜலட்சுமி விபத்தில் சிக்கினார்.

அவரது முதுகு தண்டு சேதம் அடைந்தது. கிளாசிக்கல் மற்றும் மேற்கத்திய நடனத்தில் பயிற்சி பெற்ற ராஜலட்சுமிக்கு, மாடலிங் துறையிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இந்த விபத்தால் அவரது ஆசை தகர்ந்து போனது. பல அறுவை சிகிச்சைகள், ஏராளமான பிசியோதெரபிகள் மேற்கொண்ட போதிலும் அவரால் மீண்டு வர முடியவில்லை. இதனால் சக்கர நாற்காலியே அவரது துணையாக மாறியது.

ஆனாலும் மனம் தளரவில்லை. மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த 2014 ம் ஆண்டு நடந்த, மிஸ் இந்தியா சக்கர நாற்காலி போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். 2015ல் எஸ்.ஜே., அறக்கட்டளை நிறுவி அதன்மூலம், சக்கர நாற்காலி போட்டியை ஏற்பாடு செய்தார்.

போலந்து நாட்டில் கடந்த 2017 ல் நடந்த, சக்கர நாற்காலி போட்டியில் பங்கேற்று 'மிஸ் பாப்புலாரிட்டி' என்ற விருதையும் பெற்றார். பல் அறுவை சிகிச்சை படிப்பில் தங்க பதக்கம் வென்ற போதும், அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவரே சொந்தமான பல் மருத்துவமனை திறந்தார்.

மரபியல் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதுகிறார். தற்போது பெங்களூரு அரசு பல் மருத்துவ கல்லுாரியில், உதவி பேராசிரியையாக உள்ளார். பெருமூளை வாதம் என்ற பிரிவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் இருந்து தேசிய விருதும் பெற்றுள்ளார்.



- நமது நிருபர் -

Advertisement