நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் வாகனம்

காஞ்சிபுரம்,:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது.
இந்த நான்குவழி சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலை மற்றும் பிரதான கடவுப்பாதைகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு, ஓசூர், வேலுார், ராணிப்பேட்டை ஆகிய பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு, ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு விரைவு, சாதாரண பேருந்துகள், சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏனாத்துார், ராஜகுளம், வேடல், காரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கடவுப்பாதைகளில் வாகனங்கள் கடப்பதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, சென்னையில் இருந்து, வேலுார் நோக்கி செல்லும் வாகனங்கள் ஏனாத்துார், காரப்பேட்டை ஆகிய பகுதிகளில், அடிக்கடி வாகன நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதில், 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி நெரிசலில் தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில், போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.