செய்யூரில் அபாய சாலை வளைவு வேகத்தடை அமைக்க கோரிக்கை

செய்யூர்:செய்யூரில் இருந்து பவுஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள அபாய சாலை வளைவில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூர் - பவுஞ்சூர் இடையே, 12 கி.மீ., துாரம் உடைய மாநில நெடுஞ்சாலை உள்ளது.

அம்மனுார், செங்காட்டூர், புதுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர்.

இரு சக்கர வாகனம், கார், வேன், பேருந்து, லாரி என, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் செல்கின்றன.

செய்யூர் பஜார் பகுதியில் இருந்து வடக்கு செய்யூர் இடையே, அபாய சாலை வளைவு உள்ளது.

இந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சாலை வளைவுப் பகுதியை கடந்து செல்கின்றனர்.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, இந்த அபாய சாலை வளைவில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement