பாராட்டு விழாவிற்கு அழைத்ததால் மட்டுமே சென்றேன்; வேறு ஏதும் தெரியாது: சொல்கிறார் சித்தராமையா

3

பெங்களூரு: '' கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது கர்நாடக கிரிக்கெட் சங்கம். அவர்கள் அழைத்ததால் மட்டுமே அங்கு சென்றேன். மற்றபடி எதுவும் தெரியாது,'' என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.



ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற ஆர்.சி.பி., அணிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது மாநில அரசுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.


விழாவில் ஏராளமான வி.ஐ.பி.,க்கள் பங்கேற்றதால் போதிய போலீஸ் பாதுகாப்பு செய்யப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பா.ஜ., குற்றம்சாட்டியது. ஆனால், நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க போதிய ஏற்பாடுளை போலீசார் செய்யவில்லை எனத் தெரிவித்த மாநில அரசு பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சிலர் இடமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். எதிர்க்கட்சியினர், மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் என்னைச் சந்தித்தனர். அப்போது பாராட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. கர்நாடக கிரிக்கெட் சங்கமே நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், அங்கு சென்றேன். என்னை அழைத்ததற்கு பிறகு நடந்தது தெரியாது. மைதானத்திற்கு அவர்கள் என்னை அழைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement