சென்னை - திருப்பதி நான்கு வழிச்சாலை பசுமையாக மாற்றுது தேசிய ஆணையம்

சென்னை:சென்னை - திருப்பதி நான்கு வழிச்சாலையை பசுமையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணிகளை துவங்கவுள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் மும்பைக்கு செல்லும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னை - சூரத் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் ஒருபகுதியாக, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள், ஒன்பது ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. நிலம் கையகப்படுத்துதல், கோவில்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள், இந்த இழுபறிக்கு காரணமாக அமைந்தது.

தற்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. ஆந்திராவின் ரேணிகுண்டாவில் இருந்து தமிழகத்தின் திருநின்றவூர் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், 915 கோடி ரூபாய் மதிப்பில், 44 கி.மீ.,க்கும், ஆந்திராவில் 862 கோடி ரூபாய் மதிப்பில், 37 கி.மீ., துாரத்திலும் பணிகள் நடக்கின்றன. ஆந்திர எல்லையில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில், நடப்பாண்டு இறுதிக்குள் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலையை, பசுமையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாடு முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் காற்று மாசு குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளின் இரண்டு புறங்களிலும், சாலையின் மத்தியிலும், மரக்கன்றுகள், பூச்செடிகள் வளர்க்கப்படுகிறது.

புழல் - பெருங்களத்துார் இடையிலான சென்னை பைபாஸ் சாலையில், இவ்வாறு மரக்கன்றுகள், பூச்செடிகள் நடப்பட்டு பசுமை வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. அதேபோன்று, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையும், பசுமை வழிச்சாலையாக மாறவுள்ளது.

முதற்கட்டமாக ஆந்திராவில் பணிகள் முடிந்த பகுதியில், மரக்கன்றுகள், பூச்செடிகள் நடவு செய்யும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. சாலை அமைக்கும் பணியோடு சேர்த்து, இதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement