திடீர் சூறைக்காற்று மழைக்கு ஆவடியில் சரிந்த நிழற்பந்தல்

ஆவடி:ஆவடி மாநகராட்சி சார்பில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், ஆவடி செக் போஸ்ட், திருமுல்லைவாயில், பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், தலா 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாலையின் இருபுறமும் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. ஆவடியில், முதல் முறையாக அமைக்கப்பட்ட இந்த நிழற்பந்தலால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், ஆவடி சுற்றுவட்டார பகுதியில், நேற்று பிற்பகல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த நிழற்பந்தல், சூறைக்காற்றில் திடீரென சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சரிந்து விழுந்த நிழற்பந்தலை கிரேன் உதவியுடன் அகற்றினர்.

வாகன ஓட்டிகள் நலன் கருதி, சரிந்து விழுந்த பந்தல் மீண்டும் சீரமைத்து நிறுவப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தப்பிய கார்

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் மனோ, 40, என்பவர், தன் 'மாருதி பலேனோ' காரை, துவராஜ் என்பவரின் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார்.

நேற்று மதியம் வீசிய சூறைக்காற்றால், சாலையோரத்தில் இருந்த துாங்கு மூஞ்சி மரத்தின் கிளைகள், மின் கம்பியில் உடைந்து விழுந்தது. இதில், மின் கம்பி அறுந்து, மரக்கிளை கார் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, கார் உட்பட யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

மின்கம்பி அறுந்து விழுந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விபத்து குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement