செங்கையில் அரசு பஸ் மோதி கல்லுாரி மாணவர் பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் தீபக், 19. சென்னை, நந்தனம் அரசு கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை 'டி.வி.எஸ்., அப்பாச்சி' பைக்கில், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் தர்ஷன், 18, என்பவருடன், வல்லத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்றார். பைக்கை, தீபக் ஓட்டிச் சென்றார்.

அப்போது, திருக்கழுக்குன்றம் -- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு சென்ற, தடம் எண் 108 என்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, அதே பேருந்து பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தீபக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த தர்ஷனை அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், தீபக் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement