உலகிலேயே 3வது உயரமான முருகன் சிலை

வேலுார்: வேலுார் அருகே, 92 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

வேலுார் மாவட்டம் வெங்கடாபுரத்தை அடுத்த புதுவசூர் தீர்த்தகிரிமலையில், நுாற்றாண்டுகள் பழமையான வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 92 அடி உயரத்தில், பிரமாண்ட முருகர் சிலை புதியதாக அமைக்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக கடந்த, 6ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இதை தொடர்ந்து மூலவர், கோபுரம் மீதுள்ள பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு வாணவேடிக்கை, மஹா அபிஷேகம், அலங்கார தரிசனம், திருக்கல்யாண வைபவம் நடந்தது.

Advertisement