ரோடு, சாக்கடை என எந்த வசதியும் இல்லை கண்ணீரில் கணபதி நகர் குடியிருப்போர்

மதுரை: தரமான ரோடு, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மதுரை மாநகராட்சி 10வது வார்டு கணபதி நகர் குடியிருப்புவாசிகள் பரிதவித்து வருகின்றனர்.

இந்நகரில் 2 முதன்மை தெருக்கள், 4 குறுக்குத் தெருக்கள், கபிலர், திருவள்ளுவர், கம்பர், தொல்காப்பியர் தெருக்கள், விரிவாக்கப் பகுதிகளில் மீனாட்சி நகர், அதிசயா நகர், பரணர் நகர் உள்ளன. நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் அண்ணாமலை, செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் சுரேஷ், நிர்வாகிகள் ஆறுமுகநாதன், மாதவன், ராஜ்குமார், இந்துராணி, வாணி, கோகிலா ஆகியோர் கூறியதாவது:

ரோடு வசதி



இங்கு முதன்மை தெருக்களில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளன. அதிசயா நகரில் இருந்து கணபதி நகர் செல்லும் பகுதியில் ரோடு வசதி இல்லை. மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிடும். இதனால் பள்ளி குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர்.மழைக்காலம் தொடங்குவதற்குள் தார் ரோடு அமைக்க வேண்டும்.

100 மீ., துாரம் மட்டும் கற்கள் பரப்பி ரோடு அமைத்தனர். நிதியின்மையை காரணம் காட்டி ரோடு அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. கரடு முரடான கற்களால் வாகனத்தின் டயர்கள் வீணாகின்றன. டூவீலரில் செல்வோர் கல் தடுக்கி காயமடைகின்றனர். அதிகாரிகள்,பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்தவுடன் ரோடு அமைக்கப்படும் என்கின்றனர்.

பாதாள சாக்கடை



கணபதி நகரில் பாதாள சாக்கடை வசதி உள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் அவ்வசதி இல்லாததால் பல வீடுகள் கழிவுநீரை அருகில் உள்ள காலி மனைகளில் விடுகின்றனர். குளம் போல் தேங்குவதால் புதர் மண்டி,துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது.

பரணர் நகரில் பாதி துாரம் பாதாள சாக்கடை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில மீட்டர் துாரத்தில் விரிவாக்க பகுதிகளுக்கு 'கனெக் ஷன்' வழங்க முடியும். ஆனால் 'அதிசயா நகர் வழியாகவே திட்டம் செயல்படுத்தப்படும், அதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை' என அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர்.

லாரிகளால் சேதம்



இப்பகுதியில் அங்கீகரிக்கப்படாத கிடங்கு செயல்படுகிறது. அங்கு டிப்பர், டாரஸ் லாரிகளை நிறுத்துகின்றனர். அவை பாதாள சாக்கடை மூடிகள், ரோடுகளை சேதப்படுத்துகின்றன.

கண்டெய்னர் லாரிகள் மின்கம்பிகளை சேதப்படுத்திச் செல்வதால் மின் தடை ஏற்படுகிறது. பல முறை புகார் அளித்தும் பலனில்லை. குடியிருப்பு பகுதிகளில் லாரிகளின் இயக்கத்தை தடை செய்ய வேண்டும்.

இப்பகுதியில் 12 தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். முதன்மை ரோட்டில் தெருவிளக்கு இன்றி இரவில் டியூஷன் முடிந்து குழந்தைகளை அழைத்து வருவதில் சிரமம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் தெருவிளக்குகள் அமைக்க வில்லை.

கூட்டுக்குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டிற்கு இன்னும் வராததால் குடம் ரூ.13 கொடுத்து வாங்கும் நிலையுள்ளது.

தெருநாய் தொல்லை



தெருநாய் தொல்லை அதிகம் உள்ளது. டூவீலரில் செல்வோரை துரத்திச் சென்று கடிக்கின்றன. அவற்றை மாநகராட்சியினர் பிடித்துச் செல்ல வேண்டும். கணபதி நகர் பஸ் ஸ்டாப் இருந்தும் அனைத்து அரசு பஸ்களும் இங்கு நிற்பதில்லை. காதக்கிணறில் ரேஷன் கடை உள்ளது. கணபதி நகர், பாலாஜி நகர் பகுதிகளுக்கு சேர்த்து இங்கு ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

விரிவாக்கப் பகுதிகளில் ஓடைக்கரை ஓரம் முட்புதர் மண்டிக் கிடக்கின்றன. அவ்வழியாக வரும் சமூக விரோதிகள் திருட்டிலும் ஈடுபடுகின்றனர்.

இப்பகுதியினர் தனிப்பட்ட முறையில் வீடுகளில் சி.சி.டி.வி., அமைத்துள்ளனர்.

எனினும் போலீஸ் அவுட்போஸ்ட் அமைத்து இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பால்பூத், அத்தியாவசிய பொருட்கள் கடைகள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

Advertisement