வரதராஜ பெருமாள் எழுந்தருளும் காசி குட்டை மண்டபம் ஆக்கிரமிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, பெரியார் நகர், கற்பகம் அவென்யூ அருகில் காசி குட்டை மண்டபம் உள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், 50 ஆண்டுகளுக்கு முன், ஆண்டுதோறும் பழைய சீவரம் பார்வேட்டை உத்சவம் மற்றும் தென்னேரி தெப்போத்சவத்தின்போது பழமையான இம்மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு மண்டகப்படி உத்சவம் நடைபெறும்.

ஹிந்து சமய அறநிலையத் துறையினர் காசி குட்டை மண்டபத்தை முறையாக பராமரிக்காததால், மண்டபம் சீரழிந்ததோடு, அப்பகுதியினர் மண்டபம் அமைந்துள்ள வளாகத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் ஒருவர், காசி குட்டை மண்டபத்தின் ஒரு பகுதியில் கூரை அமைத்தும், சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்தும் வளாகத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காசி குட்டை மண்டபம் அமைந்துள்ள வளாகம், ஆக்கிரமிப்பாளருக்கு தாரை வார்க்கப்படும் சூழல் உள்ளது.

எனவே, காசி குட்டை மண்டப ஆக்கிரமிப்பை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் அகற்றுவதோடு, மண்டபத்தையும், பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும்.

பழையசீவரம் பார்வேட்டை, தென்னேரி தெப்போத்சவத்தின்போது வரதராஜ பெருமாள் காசி குட்டை மண்டபத்தில் மீண்டும் எழுந்தருள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி கூறுகையில், ''காசி குட்டை மண்டபம் அமைந்துள்ள பகுதியை நேரில் ஆய்வு செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement