கரும்பாக்கத்தில் அபாய சாலை வளைவு மூன்றடுக்கு வேகத்தடை அவசியம்

திருப்போரூர்:கரும்பாக்கத்தில் உள்ள அபாய வளைவில், மூன்றடுக்கு வேகத்தடை மற்றும் எச்சரிக்கை சிக்னல் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., துாரம் உடையது. இருவழிப் பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இச்சாலை இடையே கரும்பாக்கம் பகுதி உள்ளது. இப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே அரசு பள்ளி, வணிக கடைகள், வீடுகள் உள்ளன.

இங்கு, அபாய வளைவு உள்ள நிலையில், விபத்தை தடுக்கும் வகையில் வேகத் தடை, எச்சரிப்பு சிக்னல் போன்ற பாதுகாப்பு வசதி இல்லை. இதனால், இந்த வளைவு பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், மேற்கண்ட திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில், கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது.

அப்போது, கரும்பாக்கம் கிராமத்தில், அபாய வளைவு பகுதியில், எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் மோதி, கார் விபத்துக்குள்ளானது. இதில், காரின் முன்பக்கம் முழுதும் சேதமடைந்தது.

அதேபோல் பள்ளி சுற்றுச்சுவரும், 20 அடிக்கு மேல் உடைந்துள்ளது. காரில் பயணித்தவர்கள், லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து பகல் நேரத்தில் நடந்திருந்தால் பள்ளி மாணவர்கள், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

எனவே, கரும்பாக்கத்தில் உள்ள அபாய சாலை வளைவு பகுதிகளில், மூன்றடுக்கு வேகத்தடுப்பு மற்றும் எச்சரிப்பு சிக்னல் அமைத்து, விபத்துகள் எற்படாமல் தடுக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement