வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் மாற்று ஏற்பாடு செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம்

ஈச்சங்காடு:பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது ஈச்சங்காடு. இங்கு, 250க்கும் மேற்பட்ட வீடுகளும், 40 சுய உதவி தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.
இப்பகுதிவாசிகள், மேடவாக்கம்- - பரங்கிமலை ரயில் நிலைய சாலைக்கு வாகனங்களில் கடக்கும் வகையில், அதன் அருகே செல்லும் ஏரி உபரி நீர் வெளியேறும் ஓடையில், 1962ம் ஆண்டு பாலம் அமைக்கப்பட்டது.
கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்ட அப்பாலம், இன்று வரை மீண்டும் அமைக்கப்படவில்லை. அதனால், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல வழியில்லாமல், அப்பகுதிவாசிகள் அவதியடைகின்றனர்.
இதுகுறித்து, இப்பகுதிவாசிகள் கூறியதாவது:
துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலை அமைக்கும் முன், எங்களுக்கு பிரதான போக்குவரத்தாக, இந்த பாலம் மட்டுமே இருந்தது. பழைமையானது என்பதாலும், ஓடையை அகலப்படுத்தியதாலும் பலமிழந்திருந்த அப்பாலம், 2015 ஆண்டு வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.
இதனால், அவசர காலங்களில் சிரமப்படுகிறோம். தற்போது, கீழ்க்கட்டளை ஏரியை ஒட்டி அமைந்துள்ள பல்லாவரம் கழிவுநீர் உந்து நிலையத்திற்கு செல்லும் சாலையை தற்காலிகமாக பயன்படுத்தி வருகிறோம்.
அச்சாலையும், கழிவுநீர் குழாய் பழுதுபார்க்க அடிக்கடி தோண்டப்படுவதால், குண்டும் குழியுமாகி போக்குவரத்து சிரமமாகிறது. ரேடியல் சாலையை ஒட்டியுள்ள 8 தெருக்களும், 10 அடி அகலமுடையது. வீட்டின் உரிமையாளர்கள், தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினாலே, நான்கு சக்கர வாகனங்கள், வந்து செல்ல வழியில்லை.
அதுமட்டுமின்றி, மேடவாக்கம் செல்ல ஓடையை கடக்க வேண்டியதாகிறது. அதனால், அவசரத்திற்கு ஓடையின் குறுக்கே செல்லும் கழிவுநீர் குழாய் மீது, ஆபத்தான முறையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. சில நேரங்களில், சறுக்கி விழுந்து விபத்துக்கு உள்ளாவதும் உண்டு.
எனவே, அப்பகுதியில் மீண்டும் தரைப்பாலம் அமைக்கக்கோரி, முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டர், அமைச்சர் என, பலருக்கும் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்த தரைப்பாலத்தை மீண்டும் அமைக்க, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் நிதி பங்களிப்பு செய்ய, அருகில் உள்ள தொழிற்சாலைகள் முன்வந்துள்ளன. ஆனாலும், அத்திட்டத்தை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. அரசும் கண்டுகொள்ளவில்லை.
எனவே, அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், ஈச்சங்காடு பகுதியில் மீண்டும் தரைப்பாலம் அமைத்து, போக்குவரத்துக்கு வழிவகை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'