உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வளாகம் முழுதும் மோப்ப நாய் உதவியுடன், போலீசார் சோதனை நடத்தினர்.

சமீப காலமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்கு, நேற்று மாலை 4:59 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்தது.

அதில், 'உயர் நீதிமன்ற வளாகம், சி.பி.ஐ., நீதிமன்ற வளாகம், பசுமை வழி சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வீடு ஆகியவற்றில், மாலை 6:45 மணிக்கு குண்டு வெடிக்கும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து, உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் தரப்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுதும், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என தெரிய வந்தது.

Advertisement