ஆபத்தில் சிக்குபவர்கள் அழைத்தால் 'மின்னல் வேகத்தில் உதவி கிடைக்கும்'; புதிய திட்டம் அமல்

கோவை: ஆபத்தில் இருப்பவர்களுக்கு விரைந்து உதவ வசதியாக, அவர்களின் அழைப்பு நேரடியாக ரோந்து போலீசாருக்கு செல்லும் வகையில், பிரத்யேக மென்பொருளை செயல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.
சென்னை எழும்பூரில் மாநில காவல் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. அவசர காலங்களில் இம்மையத்தை, தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும், அவசர போலீஸ் உதவி எண்களான 100, 101, 112ல் தொடர்பு கொள்ளலாம்.
இங்கு பெறப்படும் தகவல்கள், சம்பந்தப்பட்ட மாநகர, மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு பகிரப்படும். போலீசார் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ரோந்து வாகனங்கள் அல்லது 'பீட்' அலுவலருக்கு தகவல் தெரிவித்து, ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவர்.
இதில் ஏற்படும் தாமதம் காரணமாக, சில சமயங்களில் உடனடியாக உதவ முடியாத நிலை ஏற்படும். இதையடுத்து, அழைப்புகள் நேரடியாக அந்தந்த பகுதியில் உள்ள ரோந்து வாகனங்கள், பீட் அலுவலர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அது செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 'ரியல் டைம் மானிடரிங்' நடைமுறையும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ரோந்து வாகனம் எங்குள்ளது என்பதை கண்டறிய முடியும்.
போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது: மாநிலம் முழுதும் இந்நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரோந்து வாகனங்கள், பீட் அலுவலர்களின் வாகனங்களில், ஜி.பி.எஸ்., அமைப்புடன் கூடிய மொபைல் போன் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஆபத்தில் இருப்பவர் என்ன பேசினார் என்பதை கேட்க முடியும். முதற்கட்டமாக, ரியல் டைம் மானிடரிங் முறையில் ரோந்து மற்றும் பீட் வாகனங்கள் எங்குள்ளன என்பதை கண்டறிந்து, உடனடியாக அவர்களை ஆபத்தில் உள்ளவர்கள் இருப்பிடத்துக்கு அனுப்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


