கட்டட அனுமதி கட்டணம் செலுத்த அவகாசம் 60 நாளாக அதிகரிப்பு

சென்னை: கட்டுமான திட்டங்களுக்கு விண்ணப்பிப்போர், வளர்ச்சி கட்டணம், உள்கட்டமைப்பு வசதி கட்டணம் போன்றவற்றை செலுத்துவதற்கான அவகாசம், 60 நாட்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

பொது கட்டட விதிகளின்படி, கட்டுமான திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள், நகரமைப்பு துறையான, டி.டி.சி.பி., மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் போன்றவை ஒப்புதல் வழங்குகின்றன.

இதில், விண்ணப்பிப்பதில் துவங்கி, பல்வேறு நடைமுறைகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒற்றைச்சாளர முறையில், இது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் கட்டுமான திட்ட அனுமதி பணிகளை விரைந்து முடிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விண்ணப் பங்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், கட்டுமான திட்ட அனுமதி கட்டணங்கள் இறுதி செய்யப்படும்.

மேலும், வளர்ச்சி கட்டணம், உள்கட்டமைப்பு வசதி கட்டணம் போன்றவை மதிப்பீடு செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். கட்டண விகிதங்கள் தெரிவிக்கப்பட்ட நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் அதை, ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

இதன்படி, 30 நாட்களை கடந்து விட்டால், அந்த கட்டணத்துக்கு வட்டி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அடுக்குமாடி கட்டுமான திட்டங்களை பொறுத்தவரை, வளர்ச்சி கட்டணங்கள், உள்கட்டமைப்பு வசதி கட்டணங்கள் பெரிய தொகையாக வருகின்றன. இதை ஏற்பாடு செய்வதில், சில சமயங்களில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, தற்போது 30 நாட்களாக உள்ள இதற்கான அவகாசத்தை, 60 நாட்களாக உயர்த்த இருக்கிறோம். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement