அரசு சேவை இல்லத்தில் தங்கி படித்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; காவலாளி கைது

2

சென்னை: அரசு சேவை இல்லத்தில் தங்கி படித்து வரும் சிறுமியை, பாலியல் வன்முறை செய்த விவகாரத்தில், அங்கு, 14 ஆண்டுகளாக பணியாற்றிய காவலாளியை, போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னை தாம்பரம் அடுத்த சானடோரியத்தில், தமிழக சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு சேவை இல்லம் உள்ளது. இங்கு, பல மாவட்டங்களை சேர்ந்த 130 மாணவியர் தங்கி, பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கின்றனர்.



விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, 13 வயது சிறுமி, நான்கு நாட்களுக்கு முன், இந்த சேவை இல்லத்தில் சேர்ந்துள்ளார்; குரோம்பேட்டை பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அலறல் சத்தம்



நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில், மாணவி எழுந்து வெளியே வந்தபோது, மர்ம நபர் மாணவி முகத்தில் கைவைத்து அழுத்தி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.



மாணவி தொடர்ந்து போராடிய நிலையில், அம்மாணவிக்கு முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், வலது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. தொடர்ந்து போராடிய மாணவி, வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதால், அங்கிருந்து மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.


மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக மாணவியர், அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அறுவை சிகிச்சை



எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இதற்கிடையே, சம்பவம் குறித்து, சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.



சேவை இல்லத்தில் உள்ள, 'சிசிடிவி கேமரா' காட்சிகளை ஆய்வு செய்தனர். 14 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றும், சிட்லபாக்கம் பெரியார் நகரை சேர்ந்த மேத்யூ, 50, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:



அரசு சேவை இல்ல சுற்றுச்சுவரின் உயரம் 10 அடி என்பதால், வெளியாட்கள் யாரும் ஏறி குதித்து உள்ளே வருவதற்கு வாய்ப்பு குறைவு. அதேபோல, நுழைவாயிலில் காவலாளி பணியில் இருப்பதால், அந்த வழியாகவும் வெளியாட்கள் உள்ளே செல்ல வாய்ப்பில்லை.


எனவேதான், காவலாளி மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.



பாதிக்கப்பட்ட மாணவி, நான்கு நாட்களுக்கு முன்தான் வந்துள்ளார் என்பதால், வெளியில் எதையும் கூற மாட்டார் என்று எண்ணி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.


இதேபோல, வேறு யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.


மேலும், மேத்யூவின் தாய், இந்த சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். அவர் பணியில் இருக்கும்போது இறந்ததால், கருணை அடிப்படையில், 2011ல், மேத்யூவிற்கு காவலாளி பணி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பலிகடாவா?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியிடம், அனுமதியின்றி டாக்டர்கள், நர்ஸ்கள் பேசக்கூடாது. அதேபோல, மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சிட்லபாக்கம் போலீசாருக்கும், இதேபோல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்த காவலாளி, அங்கு, 14 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். மேலும், சம்பவத்தை தொடர்ந்து சேவை இல்லத்தில் தங்கியிருந்த மாணவியரிடம், போலீசாரும், சமூகநல அலுவலர்களும் விசாரணை நடத்தினர். மற்ற மாணவியர், காவலாளி மீது புகார் தெரிவிக்காததால், காவலாளி பலிகடா ஆக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.





'அரசு சேவை இல்லங்களில்

இனி பெண் காவலர்கள் நியமனம்' ''கடந்த, 14 ஆண்டுகளாக எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் பணியாற்றியதால், காவலாளி மீது சந்தேகம் எழவில்லை. இனி, அரசு சேவை இல்லங்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில், பெண் காவலர்களே நியமிக்கப்படுவர்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமியின் தாயை சந்தித்துப் பேசினோம். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை, மிகவும் சீரியசாக கவனிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சிறுமி இல்லத்தில் சேர்ந்து ஐந்து நாட்களாகின்றன. காவலாளி மீது இதுவரை எந்த புகாரும் இல்லை. அதனால், அவர் மீது சந்தேகமும் எழவில்லை. யாரை நம்புவது என்று தெரியவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த வளாகத்தில், பணிபுரியும் மகளிர் விடுதி மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது.மற்ற மாணவியர் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. அச்சிறுமி அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார். தைரியமான பெண். துணிச்சலாக போராடி உள்ளார். வேறு இல்லத்தில் சேர்த்து, அவர் படிக்க வைக்கப்படுவார். இனி, அரசு சேவை இல்லங்கள், பெண்கள் விடுதிகளில், பெண் காவலாளிகள் நியமிக்கப்படுவர். பெண் காவலாளிகள் நியமிப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்படும். வளாகத்திலேயே வார்டன் தங்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, 1098 எண்ணுக்கு வரும் அழைப்புகள் அதிகமாகி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement