180 மீட்டர் செல்ல ஓலா பைக்: தெருநாய்கள் தொல்லையால் வித்தியாசமாக யோசித்த இளம்பெண்

2

புதுடில்லி; டில்லியில் வெறும் 180 மீட்டர் நடந்து செல்ல ஓலா செயலி மூலம் இருசக்கர வாகனத்தை புக் செய்து பெண் ஒருவர் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

டில்லியில் நகரின் முக்கிய பகுதிகளில் ஓலா டாக்சிகள், பைக்குகளை பயன்படுத்துவோர் அதிகம். அப்படி ஒரு இளம்பெண் ஒருவர் ஓலா செயலி மூலம் இருசக்கர வாகனம் ஒன்றை புக் செய்துள்ளார்.

அவர் எங்கு உள்ளார் என்று கேட்டுக் கொண்டு, அங்கு இருசக்கர வாகனம் ஒன்றில் வாலிபர் ஒருவர் சென்று இருக்கிறார். பின்னர் சேர வேண்டிய இடம் பற்றி கேட்க, அவர் அருகில் உள்ள இடத்தை பற்றி கூறி இருக்கிறார்.

இளம்பெண் தாம் இறங்க வேண்டிய இடம் என்று கூறியது மிக அருகிலேயே உள்ள இடமாகும். அவர் ஏறிய இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 180 மீட்டர் தொலைவு. வெறும் 2 நிமிடம் நடந்து செல்லக்கூடிய தூரத்திற்கு ஓலா வண்டியை புக் செய்தது குறித்து வாகன ஓட்டுநர் அவரிடம் கேட்டுள்ளார்.

வழி எங்கும் தெருநாய்கள் தொல்லை, அதனால் தான் வாடகை பைக் புக் செய்ததாக கூறி இருக்கிறார். அவர் சென்றதற்கு கட்டணமாக ரூ.19ம் செலுத்தி உள்ளார்.

இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. அந்த பெண் வாகனத்தில் சென்றபோது எங்குமே தெருநாய்கள் தென்படவில்லையே, ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

சாலையில் பாதுகாப்பாக நடக்க முடியாத நிலையில் ஒரு நகரத்தின் தெருபகுதி உள்ளது என்று விமர்சித்துள்ளனர். இன்னும் சிலரோ, ரூ.19 என்பது பெரிதல்ல, ஆனால் நாய் கடித்தால் ரூ.1900 செலவு பிடிக்குமே, அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று கருத்து கூறி உள்ளனர்.

Advertisement