வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளி பஸ்...தென் ஆப்ரிக்காவில் 49 பேர் பலி


கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பள்ளி குழந்தைகள் உள்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


தென் ஆப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நிலவி வந்த கடும் பனி மற்றும் கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு கேப் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளும் மூடப்பட்டுள்ளன.


டிகோலிக்னி கிராமத்தில் ஒரு பள்ளி பஸ் ஒன்று ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதில், பள்ளி பஸ்ஸில் பயணித்த மாணவர்கள் மற்றும் டிரைவர் என 13 பேர் உயிரிழந்தனர். அதேபோல, பிற பகுதிகளில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட விபத்துக்களால் மொத்தம் 49 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

சமீப காலங்களில் தென் ஆப்ரிக்கா பல முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல், டர்பன் மற்றும் குவாசுலு-நடால் மாகாணத்தில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement